கடிதம் – 33 – குளமும், உப்பும்

January 5, 2015 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

எனக்கு தெரிந்த வரை வேறு எந்த துறையை சார்ந்தவர்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு வாஸ்து துறையை சார்ந்தவர்களுக்கு உண்டு. இதற்கு காரணம் வாஸ்து துறையை சார்ந்தவர்கள் கட்டாயம் ஒருவரின் வீட்டிற்க்கு போக வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அந்த வீட்டை பற்றிய முழு விவரங்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். வீட்டை மட்டும் அல்லாமல் வீட்டில் உள்ள மனிதர்களையும் படிக்க முடியும். அந்த வகையில் நான் நிறைய படித்திருக்கின்றேன் – மனிதர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அவர்களை பார்த்த பின்.

வாஸ்து என்கின்ற விஷயத்தை நேர்மையாக கையாண்டதால் எனக்கு உலகமே சிறியதாகி போனது. அந்தளவிற்கு மனிதர்களை சந்தித்து விட்டேன். சந்தித்தது மட்டும் அல்லாமல் அவர்களை படமாக்கி என்னுள் அதை மறவா பாடமாக்கி பதிய வைத்ததன் விளைவு என் வாழ்க்கையை அதன் எந்த கட்டத்திலும் அசராமல் அதன் போக்கிலேயே கையாளக்கூடிய திறன் கிடைக்கப் பெற்றதை தான் என்னுடைய மிகப்பெரிய பலமாக நான் கருதுகின்றேன்.

இந்த குணாதிசயம் ஏற்பட்டதன் விளைவாக இன்று மனிதர்கள் குறை சொல்லும் முன் அதை நிறையாக்க என்னால் முடிகின்றது… எதிர்மறையாக பேசுபவனை நேர்மறையாக சிந்திக்க வைக்க முடிகின்றது. இதுபோன்று நீங்களும் நினைத்ததை அடைய, மற்றவர்களுக்கு ஒரு முழுத் தீர்வாக அமைய உங்களை நீங்கள் முதலில் தேடி கண்டுபிடியுங்கள். உங்களைத் தேடி கண்டுபிடித்த பிறகு உலகைத் தேடுதலோடு தேடுங்கள். கேள்விகளோடு தேடுங்கள். கேவிக்கான பதில் கிடைக்கும் வரை தேடுங்கள். தேடி தெளிவு பெற்றால் தான் பயம் சென்று நம்பிக்கை ஏற்படும். ஏன் தேடுங்கள் என்கின்ற விஷயத்தை அதிகம் வலியுறுத்துகிறேன் என்பதற்கு ஏதுவாக இறைவன் படைப்பில் தான் எத்தனை மர்மங்கள் என்று வியக்கும் அளவிற்கு ஆச்சரியம் தரும் அந்த உண்மையை ஒரு சிறிய உதாரணம் மூலம் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

ஆறறிவு அற்ற ஒரு சிறிய அல்லது பெரிய விலங்கை பெரிய குளத்திலோ, ஆற்றிலோ தள்ளிவிட்டால் அதற்கு நீச்சல் தெரியாவிட்டாலும் கூட அது நீந்தி பின் கரை சேர்ந்துவிடும். அதேபோல் நீச்சல் தெரியாத ஆறறிவு கொண்ட ஒரு மனிதனை பெரிய குளத்திலோ, ஆற்றிலோ தள்ளிவிட்டால் அவர் தன்னால் கரை ஏற முடியாது என்ற நம்பிக்கையின் காரணமாக நீரில் மூழ்கி இறந்து போய்விடுவார். விலங்கினத்திற்கு இந்த இடத்தில் இல்லாத / தெரியாத பயம் தான் இதற்கு காரணம். நம்பிக்கை இல்லாத இடத்தில் தான் பயம் தோன்றும். தேடுதல் இல்லாதவனுக்கு தான் எதிலும் நம்பிக்கையே இருக்காது. அதனால் தான் தேடுங்கள் என்று கூறுகின்றேன்.

ஏன் கேட்டு கொண்டு தேடுங்கள் என்றால் நாம் நமக்கு தெரிந்ததை / அரைகுறையாக புரிந்ததை அப்படியே ஏற்று கொண்டு வாழ பழகி போய்விட்டோம். அது ஏறத்தாழ எல்லா சூழ்நிலைகளிலும் கிட்டத்தட்ட தவறாகத் தான் போய் கொண்டிருக்கின்றது. வெகு ஜனங்களுக்கு புரியும் வகையில் இதற்கும் ஒரு உதாரணம் உங்கள் பார்வைக்காக:-

ஐயோடின் குறைபாட்டால் தைராய்டு பிரச்சினை வருகின்றது என்பதால் நாட்டு உப்பு பயன்பாடு குறைக்கப்பட்டு, ஐயோடின் உப்பு கலந்த உப்பு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நம் மக்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை மத்திய அரசு சட்டமாக்கிய போது எனக்கு எழுந்த ஓர் சந்தேகம் என்னவென்றால் ஐயோடின் குறைபாட்டால் தைராய்டு பிரச்சினை வருகின்றது என்பதை மருத்துவ உலகம் சொன்னதால் ஒப்புக் கொள்வோம் அப்படியே.

ஆனால் என் உடலில் ஐயோடின் அளவு தேவைப்படும் அளவிற்கு சரியாக இருக்கும் போது நான் ஐயோடின் கலந்த உப்பை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் என் உடலில் ஐயோடின் அதிகமாகி அது வேறு புது பிரச்சினையை உண்டு பண்ணாதா?

நிறைய நாள் மனதை குடைந்த இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க சரியான விடை தெரிந்த மருத்துவரை தேடினேன். தேடி கண்டுபிடித்த பிறகு என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்:-

  • உடலில் ஐயோடின் அளவு சரியாக உள்ள ஒருவர் ஐயோடின் கலந்த உப்பை சாப்பிடுவது மிகப் பெரிய தவறு. எலும்பு சம்பந்தமான பெரிய பிரச்சினைகளை அது கண்டிப்பாக உண்டு பண்ணும். மேலும் அவர் இந்த சட்டத்தை கொண்டு வந்ததே என் மாணவனாக இருந்து பின் மத்திய அமைச்சரான ஒருவர் தான். நான் இந்த தவறை சரி செய்ய தனி ஆளாக போராடி கொண்டிருக்கின்றேன். அதுவரை நான் சந்திக்கும் அனைவரிடமும் ஐயோடின் கலந்த உப்பை நீரில் நனைத்து சூரிய ஒளியில் காயவைத்து உபயோகப் படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றேன் என்றும் கூறினார்.

என்னுடைய சிறிய தேடுதல் ஒரு பெரிய தெளிவை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் என நம்புகின்றேன்.

சீரான நம்பிக்கையை நீங்கள் பெற, நம்பிக்கை இல்லாதவர்களே இழந்த நம்பிக்கையை முதலில் மீட்டெடுங்கள்

நம்பிக்கை உள்ளவர்களே தயவு செய்து உங்கள் நம்பிக்கையை தேடுதலுக்கு பிறகான நம்பிக்கையாக வைத்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையின் அடித்தளமான A. B. C. D பற்றி அடுத்த கடிதத்தில் கண்டிப்பாக பார்ப்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 10 =