கடிதம் – 38 – கனவும், நனவும்

February 6, 2015 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

மாதக் கூலி வாங்கிக் கொண்டிருந்த நான், மாதக் கூலி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் கனவுகள்…

நான் கண்ட கனவுகள் மட்டுமே…

Vastu - dreamsநான் கனவு காண ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கையுடன் முரண்பட்டு இருந்த இயற்கை சமன்பாடுகள் சமமாகி போனது… இயற்கையே தன்னுடைய சமன்பாடுகளை எனக்காக மாற்றிக் கொண்டதை கண்டு, எனக்காக காத்திருந்த சவால்கள் என்னுடன் சமரசம் பேசி சருகு பறப்பது போல் என்னை சந்திக்காமலேயே பறந்து விட்டது தான் ஆச்சரிய உண்மை.

நான் பேருந்தில் ஒவ்வொரு முறை பிரயாணப்படும் போதும், இரண்டு சக்கர வாகனம் இருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்து சந்தோஷமாக பிரயாணப்படலாமே என சிந்திக்க ஆரம்பித்தேன். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் இரண்டு சக்கர வாகனம் பற்றிய கனவு மட்டுமே என்னுள் எப்போதும் வியாபித்திருந்தது. என்னுடைய காதல் கூட எனக்கு சற்று மறந்து போய் இருந்தது.

இரண்டு சக்கர வண்டி எங்கு வாங்க வேண்டும்.

இரண்டு சக்கர வண்டி வாங்குவதற்கு முன் பணம் எப்படி தயார் செய்ய வேண்டும்.

இரண்டு சக்கர வண்டி வாங்குவதற்கு வங்கி கடன் எப்படி பெற வேண்டும்.

இரண்டு சக்கர வண்டியை எந்த விநியோகஸ்தரிடம் வாங்க வேண்டும்.

இரண்டு சக்கர வண்டி எந்த கம்பெனி வண்டி, எந்த மாடல் வேண்டும் என்பது முதற்கொண்டு சரியாக யோசித்து, யோசித்து தீர்மானித்து வைத்து கொண்டேன்.

வாகனம் சொந்தமாக கிடைப்பதற்கு நான் உபயோகப்படுத்திய மந்திரம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

இந்த மந்திரத்தின் அர்த்தம்:-

பெரியாழ்வாரின் மனதில் குடியிருக்க கூடிய உறங்கா அரங்கனின் உயிர் துடிப்பான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சர்வ மங்களங்களும் உண்டாகட்டும்.

நான் ஆண்டாளிடம் எனக்கு கொடு என்று கேட்கவில்லை. நீ நன்றாக இருக்க வேண்டும் என்று அனுதினமும் சொன்னேன். இந்த மங்களாசனத்தை சொல்ல, சொல்ல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் என்னை நன்றாக பார்த்து கொண்டாள். என் எண்ணத்தையும், எண்ணங்களையும் சமயமறிந்தும், குறிப்பறிந்தும் செய்து கொடுத்தாள். ஆகவே நீங்களும் உங்களுக்கு நல்லது நடக்க, விரும்பியது கிடைக்க உங்கள் மதக் கடவுளை உறுதியாக நம்பி வாழ்த்துங்கள் இதுவரை நன்றாக கொடுத்ததற்காக. அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் எல்லாம் நன்றாக நடக்கும்.

நீ செய்ய வேண்டாம்…

நீ நினைத்து முடிப்பதற்குள்

அதை, அந்த நினைப்பின் பலனை நீ முழுமையாக நம்பும் இறைநிலை கொடுத்துவிடும். அவ்வாறு உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் உங்கள் நம்பிக்கை 100% பரிசுத்தமான நம்பிக்கையாக இருக்கவில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

துல்லியமான கனவு…

நான் நம்பும் இறைநிலை மீது இம்மியளவு கூட சந்தேகம் இல்லா பரிசுத்த நம்பிக்கை…

எனக்கு தெரிந்த 2 வரி மந்திர மங்களாசன வார்த்தைகள்…

+

எனக்கு தேவையானது என்று நான் விரும்பும் ஒரு விஷயத்தை நான் காட்சிபடுத்திய விதம்

மேற்சொன்ன நான்கும் தான் நான் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களையும் எனக்கு கொடுத்தது.

நான் காணும் கனவை எப்படி காட்சிப்படுத்துவேன் தெரியுமா?!!!

Vastu - Andal dreamஎனக்கு தேவையான விஷயத்தை ஸ்ரீரங்கம் ரங்கநாதனாக பாவித்து கொள்வேன்.

என்னை ஆண்டாளாக நினைத்து கொள்வேன். காரணம் முடிவில் 100% வெற்றி உண்டு என்கின்ற நம்பிக்கையை என்னுள் நிரந்தரமாக வைத்து கொள்வதற்காக…

நடுவில் தடை வரும்போதெல்லாம் முடிவில் ஆண்டாள் அவள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதை நினைவுபடுத்தி கொள்வேன். தடைகள் தானாக தகர்ந்து போய்விடும். உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் என்னுடைய தேவையை நிரப்பி வைத்து கொள்வேன். எண்ணம், சொல், செயல் நேர் கோட்டில் இருக்க நேரிடும் போது அதுவரை என்னுடையதாக இல்லாத ஒன்று அன்று முதல் என்னுடையதாக மாறிவிடும் அதிசயத்தை ஆயிரம் முறை அனுபவித்து விட்டேன். அதற்கு சிறிய உதாரணங்கள் தான் நான் வாங்கிய பைக்கும், கார்களும்…

சமீபத்தில் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

வேலை இல்லா நேரங்களில் அந்தப் பெண்ணின் பொழுது போக்கு

  • ஆன்மீக உரையாடல்களை கேட்பது
  • ஆன்மீக காணொளிகளை காண்பது
  • ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவது…

இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடக்கும் என நினைக்கிறீர்களா?!

கண்டிப்பாக தற்போதைக்கு நடக்காது. காரணம் அவள் தன்னை திருமணத்திற்கு ஒத்தவளாக மாற்றிக் கொள்ளாததே அதற்கு மிக முக்கிய காரணம். அவள் திருமணம் தனக்கு நடக்க வேண்டும் என்றால் அதற்கு ஒத்த விஷயங்களை கேட்டிருக்க வேண்டும்; பார்த்திருக்க வேண்டும்; பேசியிருக்க வேண்டும்; மாறாக பணத்திற்காக பெருமாள் பெருமையை பேசுபவனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி திருமணம் நடக்கும்?!

இப்பெண்ணிற்கும், இவளைப் போன்ற திருமணம் தள்ளி போய் கொண்டியிருக்கும் பெண்களுக்கும் நல்லபடி திருமணம் நடக்க இவர்கள் எல்லோரும் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கடிதத்தில் பார்ப்போமா!!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =